Thursday, October 21, 2010

யாழ்ப்பாணத்தில் கம்பியூட்டர்



கடந்த மாதம் ஒரு நேர் காணலுக்காக நான் கொழும்பு சென்றபோது நேர் காணல் செய்பவர் கணனி சம்பந்தமான எனது IIS சான்றிதழை ( ISO சான்றிதழ் இல்லைJ. IIS என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பிரபலமான கணனி நிறுவனம்) பார்த்து சிரிக்காத குறை. 1st class in Visual basic, 2nd upper class in MS office என்ற சான்றிதழ்கள் தான் அவை. பல்கலைக்கழகங்களில் மாத்திரம் class என்ற வார்த்தையை கேள்விப்பட்ட தென் பகுதியில் வசிக்கும் அவருக்கு இது புதுமையாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை நான் A/L எடுக்கும் காலகட்டத்தில்(2002) பிரபல பாடசாலைகளில் மாணவருக்கு வெறும் காட்சிப்பொருளாகவும் பொறுப்பாசிரியருக்கு பொழுதுபோக்குக் கருவியாகவும் கணனி இருந்து வந்தது.இது தனியார் கணனி நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாய் இருந்தது. விளைவு பெரும் விளம்பரங்களுடனும் உயர்ந்த கல்விக்கட்டணங்களுடனும் தனியார் கணனி கல்வி நிறுவனங்கள் வளர்ந்தன. அவ்வளவாகக் கணனி அறிவற்ற பெற்றோரும் தமது பிள்ளைகளை பெரும் செலவுடன் படிக்க வைத்தனர்.இவை கணனி இல்லாத அக்காலத்தில் உபயோகமாய் இருந்தபோதிலும் தற்போது MS office போன்றவை சுயமாக அறியக்கூடியவை. Help வசதிகளுடன் கூடிய MS office இலகுவாக கற்கக் கூடியது.



ஆனால் தற்போது சிறுவயதிலேயே கல்லூரிகளில் கணனிக்கல்வி ஆரம்பிக்கப் பட்டிருப்பதும் சிறுவர்கள் இணைய அறிவு பெற்றிருப்பதும் பாராட்டத்தக்கது. இணையத்தால் சிறுவர் சிலர் தவறான வழிக்குத் திரும்பும் அபாயம் இருப்பினும் பொதுவாக பல நன்மைகள் உண்டு.




எது எவ்வாறாயினும் தற்போதும் கூட பொதுவாகப் பெற்றோருக்கு போதிய கணனி அறிவு இல்லை என்பதும் அதனை அவரது பிள்ளைகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதும் வேதனைக்குரியது. எனது ஊரில் ஒரு தாயார் தனது மகனைப் பற்றி “அவன் கம்பியூட்டர் எல்லாம் படித்து முடித்து விட்டான் “ என்று பெருமையாகக் கூறியபோது ஒருவேளை கணனி பொறியியலாளனோ என நினைத்து விசாரித்தால் படித்தது “MS office” மட்டுமே. MS office படித்து விட்டு வெட்டியாக ஊரைச்சுற்றுபவரைப் பற்றி கதைத்து அந்த அப்பாவித்தாயாரின் மகிழ்வைக் கெடுக்க மனமின்றி மெளனமானேன். வேறு ஒருவரும் இதே மாதிரித் தான். கம்பியூட்டரில் முகப்புப் புத்தகத்திலும் Game விளையாடுவதிலும் மாத்திரம் பொழுது போக்கும் ஒருவரது தந்தை கூறியது “அவனுக்கு கம்பியூட்டரில எல்லாம் தெரியும்,என்ன மாதிரி வேலை செய்யுறான்” என்று. பெடியனில் அபார நம்பிக்கை வைத்திருக்கும் அந்தத் தந்தையின் அப்பாவித்தனத்தைப் பார்த்து அழுவதா ,சிரிப்பதா என்று தெரியவில்லை.சும்மாவா சொன்னார்கள் “ஆதிவாசிக்கு கம்பியூட்டர் கடவுள்” என்று.


எனது வேலைத்தளத்தில் எனது மேலதிகாரி ஒருவரைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். சிவில் field ல் அவரது அனுபவ அறிவை மிஞ்ச எவருமில்லை.ஆனால் கணனி அறிவு இல்லை.முன்பு Road design என்றால் பெரிய வரைபடத்தில் பொறுமையாக பென்சிலால் வரைந்து சிரமப்படவேண்டும்.தற்போது Autocad,Civil3D உதவியுடன் இலகுவாக வரைய முடியும். குறிப்பிட்ட அதிகாரி எங்களது road design பார்த்துவிட்டுக் கூறுவார்.”என்ன இது!கம்பியூட்டரில் ஒரு பட்டனைத் தட்ட எல்லாம் வராதா?” என்று. “ஒருபட்டன் தான் Sir! (Mouse click) ஆனால் கனதரம் தட்டவேணும் “ என்பது எங்களது பதில். இது வேடிக்கையாய் இருப்பினும் எதிர் காலத்தில் அவர் கூறியபடி ஒரு பட்டனைத் தட்ட எல்லாம் வரக் கூடும்.

உண்மையிலேயே கணனி அறிவு பரவ வேண்டுமானால் சிறுவருக்கு மாத்திரம் கற்பித்தால் போதாது. பெரியவர்களும் ஓரளவு கணனி அறிவு கொண்டிருக்க வேண்டும். எனது உறவினர் ஒருவர் தனது மகனுடன் அவுஸ்திரேலியாவில் சில மாதங்கள் தங்கி விட்டு வந்தவ்ர் கணிசமான கணனி அறிவு பெற்றிருந்தார்.சில தொண்டு நிறுவனங்கள் வயது முதிர்ந்தோருக்கு இலவசமாக இலகு கற்கை நெறிகள் வழங்குவதாகக் கூறியபோது எனக்கு அந்த அப்பாவித் தாயாரும் பெடியனில் நம்பிக்கை வைத்திருக்கும் தந்தையும் தான் ஞாபகத்திற்கு வந்தனர். இங்கே இவை எந்தளவிற்கு சாத்தியம் எனச் சிலர் வாதாடலாம்.

தற்போது எனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கணனி அறிவற்ற ஒரு தாயார் வெளி நாட்டிலுள்ள தனது மகனுடன் நேரில் பார்த்துக் கதைப்பதற்காக மாத்திரம் ஒரு Web camera உள்ளடங்கிய லப்ரொப்பும் வலையமைப்பும்(CDMA) பெற்றது எனக்கு ஆச்சரியத்தையும் அதே வேளை பெற்றோரும் கண்னியறிவு பெறும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனும் நம்பிக்கையையும் ஊட்டுகிறது தற்போது கைத்தொலைபேசி எப்படி எல்லோரது வாழ்க்கையையும் ஆக்கிரமித்து இருக்கிறதோ அதே மாதிரி கணனியும் எதிர்காலத்தில் மூலைமுடுக்கெல்லாம் பரவக் கூடும்.
தற்போது பாதையோரத்தில் கிளி ஜோசியம் சொல்பவனுக்குப் பதிலாக எதிர் காலத்தில் கணனி ஜொசியம் சொல்லக்கூடும்.(தற்போதும் கூட கணனி ஜோசியம் software புழக்கத்தில் உண்டு). ATM Machine சாத்தியமானால் இது ஏன் சாத்தியமில்லை?

கணனிப் பாவனையின் இன்னொரு மைல் கல் “Robotic Engineering”. இது பற்றிக் கூறுவதை விட ரஜனியின் எந்திரன் திரைப்படத்தை ஒருமுறை பார்த்தால் போதும்.
எந்திரன் படத்தில் வருவது போல் எதிர்காலத்தில் ஒரு வேளை ரோபோக்களின் ராச்சியம் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அப்படியொரு நிலை வந்தால் கடவுளுக்குப் பதிலாக கம்பியூட்டரை வழிபடும் நிலை ஏற்படலாம்.

No comments:

Post a Comment